காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உழவர் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இப்பேரியக்க மாநிலத் தலைவர் கோ. ஆலயமணி தெரிவித்திருப்பது:
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் அறுவடை தருணத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சேமித்து வைக்க இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை கேட்கின்றனர்.
எனவே, விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும்.
இல்லாவிட்டால் விரைவில் டெல்டா மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.