ஒரத்தநாடு வட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆம்பலாப்பட்டு கிராமத்தில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பில் தென்னங்கன்று வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் எஸ். குருஷங்கர் மற்றும் இணை நிர்வாக இயக்குநர் காமினி குருஷங்கர் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினர்.
விழாவில் மருத்துவர் குருஷங்கர் பேசும்போது,
தஞ்சை மீனாட்சி மருத்துவமனை, விவசாயிகள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் எங்கள் மருத்துவமனை சார்பில் குறுகிய காலத்தில் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேரிடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த முகாம்களின் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஆம்பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 5,000 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
விழாவில் டாக்டர் புனிதகுமார், ஆம்பலாப்பட்டு முன்னாள் ஊராட்சி தலைவர் அப்பாவு, ஒன்றிய கவுன்சிலர் கவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவில் திரைப்பட இயக்குநர் சற்குணம் நன்றி கூறினார். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.