கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இறந்த பெண்ணின் உடல் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கும்பகோணம் அருகே நெடார் நந்திவனத்தைச் சேர்ந்த தமிழரசன் மனைவி தனலட்சுமி (29). இவருக்கு ஸ்ரீநிதி (6), மிதுன் (3) ஆகிய இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஜன. 8ஆம் தேதி சென்றார். பின்னர், வியாழக்கிழமை குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்ட இவர் அங்கு இறந்தார். இவர் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் கூறி, உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.
தவறான சிகிச்சையால் தனலட்சுமி இறந்ததாகவும், அதற்குக் காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தனலட்சுமி உடல் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் பிரபாகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாக்கோட்டை க. அன்பழகன் (கும்பகோணம்), கோவி. செழியன் (திருவிடைமருதூர்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இலக்கிய அணி மாநிலச் செயலர் தமிழினி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உறவினர்களின் கோரிக்கையை ஏற்று தனலட்சுமி உடலை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்வது என முடிவு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.