தஞ்சாவூரில் மக்கள் மேம்பாட்டு வினையகம் சார்பில் திருநங்கைகளின் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை வகித்த தஞ்சாவூர் மாவட்ட எய்ட்ஸ் எதிர்ப்புக் கூட்டு சிகிச்சை மருத்துவர் மற்றும் மாவட்டத் திட்ட மேலாளர் கே. பசுபதீஸ்வரன் பேசியது:
திருநங்கைகளுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. இதைப் பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும். ஒவ்வொரு திருநங்கையும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு உடற்பரிசோதனையைக் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்றார் அவர். விழாவில் திருநங்கைகளுக்கு மருத்துவப் பரிசோதனை, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து திருநங்கைகள் பொங்கல் வைத்து வழிபட்டு, நடனம் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்றனர்.
விழாவில், திருநங்கைகளின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் ஆர்.எம். நளினி, செயலர் என். ராகினி தலைமையில் 50-க்கும் அதிகமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். மக்கள் மேம்பாட்டு வினையக ஆலோசகர் எஸ். தேன்மொழி, ஒருங்கிணைப்பாளர்கள் என். கங்கை, எஸ். சண்முகப்பிரியா, ஆர். அகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.