கும்பகோணம் நகரிலுள்ள கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோயிலில் பொங்கல் பண்டிகையொட்டி செவ்வாய்க்கிழமை 3008 செங்கரும்புகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னொரு காலத்தில் இக்கோயிலின் வழியாக கரும்பு வணிகர் ஒருவர் மாட்டு வண்டியில் கரும்புகளை ஏற்றிக்கொண்டு மார்க்கெட் விற்பனைக்கு சென்று கொண்டிருந்தாராம். அவரது தர்ம சிந்தனையை பரிசோதிக்கும் வகையில் விநாயகர் ஒரு சிறுவனாக மாறுவேடம் கொண்டு வணிகரிடம் ஒரு கரும்பு கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் வண்டியில் இருந்த கரும்பை தானே சிறுவன் உருவிக் கொண்டாராம். இதனால் கோபமடைந்த வணிகர் கரும்பை பிடுங்கி கொண்டு சிறுவனை அதே கரும்பால் அடித்துள்ளார். பின்னர் சிறுவன் கோயிலுக்குள் ஓடி மறைந்தார். அதே நேரத்தில் வண்டியில் இருந்த கரும்பு கட்டுகள் காய்ந்து விறகுகளாக மாறிவிட்டன.
இதனால் அதிர்ச்சி அடைந்த வணிகர் வந்து சென்ற சிறுவன் விநாயகர் என்பதை உணர்ந்தார். பின்னர் கோயிலுக்கு விநாயகரை வழிபட்டார். அதன் பிறகு வண்டியில் இருந்த விறகுகள் முன்பிருந்ததை போலவே செங்கரும்புகளாக மாறியதாக கோயிலின் வரலாறு தெரிவிக்கிறது.
இச்சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று கரும்பாயிரம் விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு செங்கரும்புகளால் அலங்கரிக்கப்படுகிறது.
அதன்படி செவ்வாய்க்கிழமை 3008 கரும்புகளால் கோயில் முழுவதும் அலங்கரித்து சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.