பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேல வீதியில் வியாழக்கிழமை மாலை பாரம்பரிய கோலப் போட்டி நடைபெற்றன.
இன்டாக் (இந்திய தேசிய பாரம்பரிய கலை பண்பாட்டு அறக்கட்டளை) மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்ற கோலப் போட்டியில் ஏறத்தாழ 150 பெண்கள் கலந்து கொண்டனர்.
மேல வீதியில் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு வரிசையாக ஐந்துக்கு ஐந்து என்ற அளவில் பெண்கள் பாரம்பரிய புள்ளிக் கோலங்களைப் போட்டனர். இப்போட்டியில் நடுவர்களாக தஞ்சாவூர் திவாஸ் ரோட்டரி சங்கத் தலைவர் லஷ்மி கணேசன், செயலர் லதா ஞானமணி, இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் ஜி. செல்வராணி ஆகியோர் பார்வையிட்டு சிறந்த கோலங்களைத் தேர்வு செய்தனர். இதில், முதலிடத்தை அருளானந்த நகரைச் சேர்ந்த விஜிதா சதீஷ்குமார், இரண்டாமிடத்தை வடக்கு வீதியைச் சேர்ந்த பவித்ரா, மூன்றாமிடத்தை வடக்கு அலங்கத்தைச் சேர்ந்த ஆர். செளந்தர்யா ஆகியோரும், ஆறுதல் பரிசாக 10 பேரும் பெற்றனர்.
முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,500, மூன்றாம் பரிசாக ரூ. 5,000, ஆறுதல் பரிசாக தலா ரூ. 1,000 ஆகியவற்றை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்டோர் வழங்கினர். மேலும், பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம். சுவாமிநாதன், இன்டாக் கெளரவச் செயலர் எஸ். முத்துக்குமார், உறுப்பினர்கள் செல்வராஜ், கார்த்திகேயன், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.