ஒருங்கிணைந்த நிதி- மனிதவள மேலாண்மை திட்டம் தொடக்கம்

தஞ்சாவூரில் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். 

தஞ்சாவூரில் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். 
இந்தத் திட்டத்தில் பணியாளர் எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை அரசு அலுவலர்களுக்கு வழங்கி ஆட்சியர் பேசியது:
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தஞ்சாவூர் மாவட்ட கருவூல அலகில் சுமார் 29,004 அரசுப் பணியாளர்களும், 31,697 ஓய்வூதியர்களும் பயன் பெறுவர்.  சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்களது பட்டியல்களை இணையதளம் மூலம் எவ்வித கால நிபந்தனையுமின்றி கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்க இயலும்.
சம்பள பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பித்த நேரத்திலிருந்து அரசு ஊழியர்கள் மற்றும் பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் வரையிலான ஒவ்வொரு நிலையையும், ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக எளிதாக அறிந்து கொள்ளும் சூழல் இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது.
 இத்திட்டத்தின் மூலம் மின்னணு பணிப்பதிவேடு மற்றும் ஊதிய மென்பொருள் பதிவுகள் ஒருங்கிணைக்கப்படுவதால், மின்னணு பணிப்பதிவேட்டில் செய்யப்படும் அனைத்து பதிவுகளும் உடனுக்குடன் ஊதிய மென்பொருளில் தானாகவே மேம்படுத்தப்பட்டு, அரசுப் பணியாளர்கள் தங்களது ஊதிய விவரத்தை உடனுக்குடன் சரிபார்க்க முடியும். 
நினைவூட்டுத் தகவல்களின் மூலம் ஆண்டு ஊதிய உயர்வு,  விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றிற்கான பணப்பலன்களை பணியாளர்கள் உரிய நேரத்தில் பெற இயலும். பதவி உயர்வு கருத்துருக்கள் தயாரித்தல், வருடாந்திர ஊதிய உயர்வு அங்கீகரித்தல், ஊதிய நிர்ணயம், விடுப்பு அங்கீகரிப்பு மற்றும் ஓய்வூதிய கருத்துருக்கள் அனுப்புதல் போன்ற பணிகளை சரியான காலத்தில் மேற்கொண்டு,  அரசு ஊழியர்கள் தங்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை உரிய காலத்தில் பெற இத்திட்டம் வழி  வகுக்கிறது.
 இத்திட்டம் மூலம் அனைத்து பணியாளர்களும் அவரவர் பணிப்பதிவேட்டினை கணினி மற்றும் கைப்பேசி செயலியில் தங்களது கடவுச் சொற்களை பயன்படுத்தி அறிந்து கொள்ள இயலும் என்றார் ஆட்சியர். 
நிகழ்ச்சியில்,  கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிட துரிதமாக செயல்பட்ட அனைத்து கருவூல அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை ஆட்சியர் பாராட்டினார்.
மாவட்ட கருவூல அலுவலர் சோமசுந்தரம்,  கூடுதல் கருவூல அலுவலர் கல்யாணி, கருவூல அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com