கும்பகோணத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த மலேசிய பெண் மர்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்தார்.
மலேசியா நாட்டை சேர்ந்த பழனிசாமி மனைவி ஆராயி (61). இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதற்காக செவ்வாய்க்கிழமை வந்தார். இவருடன் இவரது கணவர் பழனிசாமி, மகள் மகாலட்சுமி உள்பட மூவர் வந்துள்ளனர். கும்பகோணத்தில் உள்ள தங்கும் விடுதியில் 4 பேரும் தங்கி இருந்தனர். இந்நிலையில், புதன்கிழமை காலை ஆராயி எழுந்திருக்கவில்லை. இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு பழனிசாமி தகவல் கொடுத்தார். ஆராயியை ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து கிழக்கு போலீஸார் விசாரித்தனர். உணவு ஒவ்வாமை காரணமாக ஆராயி இறந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.