தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுக்காக தங்கள் கல்வித் தகுதியை தங்கள் பள்ளிகளிலேயே இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் கா. சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை (ஜூலை 10) முதல் வழங்கப்படுகிறது. புதன்கிழமை முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுகளை மேற்கொள்ளலாம். மேலும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் www.tnvelaivaaippu.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட பள்ளிகளை அணுகி தங்கள் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.