கழிவுகளை ரோபோ மூலம் சுத்தம் செய்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார் தேசிய துப்புரவு ஆணைய உறுப்பினர் ஜகதீஷ் ஹிர்மானி.
கும்பகோணம் நகராட்சி சார்பில் ரோபோ மூலம் புதை சாக்கடை அடைப்புகளை சுத்தம் செய்யும் பணியை சனிக்கிழமை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மத்திய அரசுத் தூய்மைப் பணிக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதி மூலம் கும்பகோணம் நகராட்சிக்கு ஓராண்டுக்கு முன்பு ரோபோ இயந்திரம் வழங்கப்பட்டது.
இந்த இயந்திரத்தை மேலும் பல இடங்களில் செயல்படுத்துவது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ரோபோ இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கழிவுகளை முற்றிலும் ரோபோ இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
கும்பகோணம் நகராட்சி சார்பில் மேலும் ரோபோ இயந்திரம் வாங்க கோரிக்கை வைக்கப்பட்டால், அதுகுறித்து மத்திய அரசுக்கு உடனே பரிந்துரை செய்யப்படும்.
தேசிய நிதி வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் கும்பகோணம் நகராட்சிக்குத் தேவையான நிதியை அளித்து வருகிறோம். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசுத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என்றார் ஜகதீஷ் ஹிர்மானி.
இதைத்தொடர்ந்து கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள சேய் குளத்தைப் பார்வையிட்டார். அவருடன் கும்பகோணம் நகராட்சி ஆணையர் (பொ) ஜெகதீசன், உதவிப் பொறியாளர் பிரதான்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.