கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஒரத்தநாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கக் கொடியேற்று விழா மற்றும் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கானதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டத் தலைவர் தனசெல்வம் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
கிராம நிர்வாகஅலுவலர்களுக்குத் தேவையான கட்டட, கழிவறை வசதிகள், போதுமான கணினி வசதிகள் போன்றவற்றை செய்து தர வேண்டும். வெகுதொலைவிலிருந்து கிராமங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டிய நிலை இருப்பதால், சம்பந்தப்பட்ட கிராமங்களில் குடியிருப்புகளைக் கட்டித் தர வேண்டும். சொந்த மாவட்டங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் கெளரவத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் விஜயபாஸ்கர், மாவட்டத் தலைவர் ராஜேஷ் கண்ணா, மாவட்டச் செயலர் செல்லத்துரை, மாவட்டத் துணைத் தலைவர் தியாகராஜன், முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் முதன்மைப் பொதுச் செயலர் அறிவழகன் சங்கக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.வட்டச் செயலர் சரவணகுமார் , மாவட்டத் துணைச் செயலர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். நிறைவில் வட்டப் பொருளாளர் முனியாண்டி நன்றி கூறினார்.