பேராவூரணி வட்டம், செருவாவிடுதியில் விவசாயிகளுக்கான கூட்டுப் பண்ணையப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் துறைசார்பில் அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புக்கு, பேராவூரணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ். மாலதி தலைமை வகித்து பேசியது:
நடப்பாண்டில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் கீழ் சாணாகரை,மாவடுகுறிச்சி, புனல்வாசல் கிழக்கு,அலிவலம்,களத்தூர் மற்றும் செருவாவிடுதி ஆகிய 6 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் 6 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் 20 உறுப்பினர்களைக் கொண்ட 5 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைத்து , அவர்களை ஒன்று சேர்த்து 100 உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்க வேண்டும் .
இக்குழுக்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கி, மாதம் குறைந்தது ரூ.2000 சேமிப்பு செய்து வரவேண்டும். குறைந்த வட்டியில் உறுப்பினர்களுக்கு உள்கடன் கொடுத்து வசூல் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்துப் பணிகளையும் குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக செயல்படுத்திட வேண்டும் என்றார் அவர்.
வேளாண் அலுவலர் ராணி மற்றும் வேளாண் வணிக அலுவலர் தாரா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் செயல்பாடுகள்,பதிவேடுகள் பராமரித்தல் குறித்து பேசினார்கள். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மாதிட்ட அலுவலர்கள் சுரேஷ், தமிழழகன், சத்யா ஆகியோர் செய்திருந்தனர் .