பாபநாசம் அருகே விவசாயி வீட்டில் 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாபநாசம் அருகிலுள்ள பண்டாரவாடையைச் சேர்ந்தவர் விவசாயி அப்துல்காதர் (51). இவருக்கு வெள்ளிக்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், குடும்பத்தினர் கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிகிச்சை பெற்று இரவு அப்துல்காதரும், அவரது குடும்பத்தினரும் வீடு திரும்பிய போது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
அப்துல்காதர் அளித்த புகாரின் பேரில், பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால், காவல் ஆய்வாளர் நாகரத்தினம் ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருட்டில் ஈடுபட்டவர்களின் ரேகைகளை தடயவியல் நிபுணர்கள் பதிவு செய்தனர்.
இதுகுறித்து பாபநாசம் போலீஸார் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.