தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து, 20 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை கிராமம், மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவர் பாபநாசம் பாரத ஸ்டேட் வங்கியின் முன்புறம் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பணம் எடுக்க முயன்றார். அப்போது, அவரருகே நின்றிருந்த அடையாளம் தெரியாத நபர், தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் கார்டையும், ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்து கொண்டாராம்.
பின்னர், அப்துல்ஹமீது கணக்கில் பணம் எடுப்பதுபோல் நடித்து, அவரது கணக்கில் பணம் இல்லை எனக் கூறி, அப்துல்ஹமீதுவிடம் அவரது எடிஎம் கார்டை கொடுப்பதுபோல் அந்த நபர் வைத்திருந்த வேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்று விட்டாராம். இதன் பிறகு, அந்த நபர் அப்துல் ஹமீதுவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கபிஸ்தலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மிலிருந்து ரூ.15 ஆயிரம், அய்யம்பேட்டை பகுதியிலுள்ள ஒரு ஏடிஎம் மையத்திலிருந்து ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 20 ஆயிரத்தை எடுத்து கொண்டுவிட்டாராம். முன்னதாக, அந்த நபரின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த அப்துல்ஹமீது வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, அவரது கணக்கிலிருந்து ரூ. 20 ஆயிரம் பணம் எடுத்திருப்பது புதன்கிழமை தெரிய வந்தது. இதுகுறித்து பாபநாசம் போலீஸார் விசாரிக்கின்றனர்.