தஞ்சாவூர் மாவட்டம், தோகூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளும், 5 பேருக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணைகளும், ஒருவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையும், 12 பேருக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்கான ஆணைகளும், 56 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளும், தலா ஒருவருக்கு ஒருங்கிணைந்த சான்றும், கலப்புத் திருமண சான்றும், 11 பேருக்குக் குடும்ப அட்டைகளும், வேளாண்மைத் துறை சார்பில் 6 பேருக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள், தோட்டக்கலைத் துறை சார்பில் இருவருக்கு மானிய விலையில் கொய்யா, மா கன்றுகள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தாமரை மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ. 50,000-க்கான காசோலை, இரு மகளிருக்கு சுயதொழில் தொடங்குவதற்கு ரூ. 10,000, ரூ. 50,000-க்கான காசோலையும் வழங்கப்பட்டன.
பின்னர், ஆட்சியர் பேசியது:
இம்முகாமை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து ஒரு மாதத்துக்கு முன்பாக 40 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், முகாமில் 240 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், தகுதியுடைய நபர்களுக்கு கோரிக்கையை நிறைவேற்றவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார் ஆட்சியர்.
முகாமில் கோட்டாட்சியர் சி. சுரேஷ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.