தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே காதல் பிரச்னையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட மணலூரைச் சேர்ந்தவர் வீரமணி மகன் பிரசாந்த் (22). இவர் திருவையாறு அருகே பனவெளி கிராமத்தில் வெட்டாறு தென் கரையில் புதன்கிழமை காலை வாய் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுகுறித்து நடுக்காவேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இலுப்பக்கோரையைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மாணவியை பிரசாந்த் இரு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு மாணவி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவியை பிரசாந்த் அவரது வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு தலைமறைவானார்.
இருவரையும் கண்டுபிடித்த மாணவியின் உறவினர்கள் தரப்பினர், பிரசாந்தை புதன்கிழமை கடத்திச் சென்று பனவெளி கிராமத்தில் வெட்டாற்றில் வைத்து கம்பியால் தாக்கி கொலை செய்தனர். இதையடுத்து, உமையவள் ஆற்காடைச் சேர்ந்த குமார் (52), பார்த்திபன் (31), ஈச்சன்குடியைச் சேர்ந்த சுரேந்திரன் (27), இலுப்பக்கோரையைச் சேர்ந்த தினேஷ் (26), மணலூரைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும், இலுப்பக்கோரையைச்சேர்ந்த முருகராஜ், சரவணன், தங்கதுரை ஆகியோரை தேடி வருகின்றனர்.