பட்டுக்கோட்டையில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னையில் நீரா பானம் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் பங்கேற்றனர்.
முகாமுக்கு தலைமை வகித்து பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) எஸ்.சங்கீதா பேசுகையில், தற்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள பயிர் சாகுபடி செய்வது மட்டும் போதாது. சந்தைக்கேற்ப உற்பத்தி முறைகளை மாற்றி அமைத்து விவசாயிகள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தஞ்சாவூர் வேளாண்மை அலுவலர் (விற்பனை மற்றும் வணிகம்) ஆர்.தாரா, நீரா பானம் தயாரிப்பு முறைகள், மரம் தேர்வு, நீரா பானம் தயாரிப்புக்கு உரிமம் பெறுதல், குழுக்கள் அமைத்தல், நீரா பானத்தை பதப்படுத்துதல், தென்னை வெல்லம் தயாரித்தல், நீரா பானத்திலுள்ள ஊட்டச்சத்து பொருள்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் ஆகியன குறித்து படவிளக்க காட்சிகள் மூலம் விளக்கினார். மாநில தென்னை ஒட்டுப்பணி மைய பட்டுக்கோட்டை வேளாண்மை அலுவலர் ஜீ. பார்வதி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் சி. சுகிதா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் த. ரவி, வி. ரமேஷ் உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டனர்.