தஞ்சாவூர்: திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் கால்நடை, பறவைகளுக்காகக் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயப் பகுதி என்பதால், கால்நடைகளும் மரங்களும் அடர்ந்து காணப்படுகின்றன. இங்கு ஏராளமான பறவைகள் உள்ளன. கோடையில் ஆறு, குளங்கள் நீரின்றி வறண்டுவிட்டதால், பொது குடிநீர் குழாயடியில் கால்நடைகள், பறவைகளுக்காகக் குடிநீர் தொட்டிகளைப் பேரூராட்சி நிர்வாகம் வைத்துள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தெரிவித்தது:
பொதுமக்கள் பயன்படுத்திய நீரை வீணாக்காமல் அருகில் வைக்கப்பட்டுள்ள கால்நடை குடிநீர் தொட்டியில் ஊற்றி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பேரூராட்சி பகுதியில் முதல் கட்டமாக 15 பொது குடிநீர் குழாயடியில் கால்நடை, பறவைகளுக்காகக் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் பயன்பாட்டை பொருத்து மேலும் கால்நடைகளுக்கான தொட்டிகள் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.