புதிய கல்விக் கொள்கையை உடனடியாக கைவிட வலியுறுத்தி தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முன் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்த மாணவ, மாணவிகள் வாயிலில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, புதிய கல்விக் கொள்கை நகலை இந்திய மாணவர் சங்கத்தினர் எரித்தனர். இதை போலீஸார் தடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜி. அரவிந்த்சாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில்... இதேபோல, கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி வாயிலில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்தி, சம்ஸ்கிருத மொழிகளைத் திணிப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் புதிய கல்வி கொள்கை நகலை இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலகுரு தலைமையில் நிர்வாகிகள் தீயிட்டு எரித்தனர்.