தங்களின் இலக்கை நோக்கி மாணவ, மாணவிகள் பயணிக்க வேண்டும் என்றார் இஸ்ரோ முதன்மை விஞ்ஞானி மற்றும் துணை இயக்குநர் மு. சங்கரன்.
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 64 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, 1,119 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி, மேலும் அவர் பேசியது: மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியில் செல்கிறீர்கள். வெளியுலகம் நீங்கள் படித்த கல்லூரிப் படிப்பை விட கடுமையானதாகும். நீங்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும். மதிப்பெண் என்பது நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்காது. அதை எண்ணி மனச்சோர்வு அடையக் கூடாது. அது அளவுகோலும் அல்ல. மாணவ-மாணவிகள் தங்களுடய இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
முதலில் தங்களை உயர்த்திக்கொள்வதில் மாணவ-மாணவிகள் சுயநலத்துடன் இருக்க வேண்டும். தங்களை உயர்த்திக்கொண்டால் தான் மற்றவர்களை உயர்த்த முடியும். தாம் கற்ற கல்வியைப் பிறருக்கு பயன்படும் வகையில், ஏதாவது ஒரு முறையில் உதவி செய்ய வேண்டும். அப்போது தான் அந்த கல்வி முழுமை பெறும்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு படிப்பை மட்டுமின்றி வேலைவாய்ப்பு தொடர்பாக ஆய்வு செய்து அவர்களுடய வாழ்க்கையை மேம்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும். ஆண் படித்து முன்னேற்றம் அடைந்தால் அது அவருடைய குடும்பத்தை மட்டும்தான் பாதுகாக்கும். பெண் படித்து முன்னேற்றம் அடைந்தால் அது தலைமுறையைப் பாதுகாக்கும் என்றார் சங்கரன். விழாவுக்கு கல்லூரி முதல்வர் வெ.செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். தஞ்சை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தி. அறிவுடைநம்பி வாழ்த்திப் பேசினார். துறைத் தலைவர்கள், பேராசிரிய, பேராசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.