பணியிடமாற்றத்தை ரத்து செய்யாத தமிழக அரசை கண்டித்து தேர்தலையும், தேர்தல் பணியையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலர் சேகர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரிப் பேராசிரியர்கள் பணியிடை நீக்கமும், மாற்றமும் செய்யப்பட்டனர். இதை ரத்து செய்யக் கோரி உயர்கல்வித்துறை அமைச்சர்,செயலர், கல்லூரிக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோரிடம்
அரசுக் கல்லுôரி ஆசிரியர் மன்றம், அரசு கல்லுôரி ஆசிரியர் கழகம் மற்றும் கல்லூரி- பல்கலைக்கழக எஸ்சி எஸ்டி ஆசிரியர் சங்கம் மூன்று சங்கங்களும் இணைந்து கோரிக்கை வைத்திருந்தன.
போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் துறைகளிலும் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு அவர்கள் திரும்ப பணியமர்த்தப்பட்ட நிலையில், அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் சேகர், அரசு கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச் செயலர் தாமோதரன், வீரமணி, கல்லூரி பல்கலைக்கழக எஸ்சி எஸ்டி ஆசிரியர் சங்கப் பொதுச்செயலர் கண்ணையன் உள்ளிட்ட 15 பேராசிரியர்கள் தொலைவிலான பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இதை ரத்து செய்யக் கோரி கடந்த ஒரு மாதமாக வலியுறுத்தப்பட்ட நிலையில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் பணிகள் முடிந்த பின்னர்தான் நடவடிக்கை எடுப்பதாகவும், தேர்தல் விதிகளை காரணம் காட்டி தற்போது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய முடியாது எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். கல்லூரிக் கல்வி இயக்குநர், உயர்கல்வித்துறை செயலர், அமைச்சர் ஆகியோரது இந்த செயல், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கி மாற்றத்தை உருவாக்கும்.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்களை பணியிடமாற்றம் செய்ததை ரத்து செய்யாத தமிழக அரசையும், உயர்கல்வித்துறை அதிகாரிகளையும் கண்டித்து, அரசு கல்லுôரிகளில் இயங்கும் மூன்று சங்கங்களில் உள்ள சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்தும், தேர்தல் பணியில் ஈடுபடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.