பெண்கள் பெருமைக்குரியவர்கள் என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வு நெறியாளர் க. துரையரசன்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 375 இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கி மேலும் அவர் பேசியது:
பெண்கள் இல்லையென்றால் இந்த உலகம் இல்லை. ஒரு ஆணுக்குக் கொடுக்கும் கல்வி தனி மனிதன் சார்ந்த கல்வியாக இருக்கும். ஆனால், ஒரு பெண் பெறக்கூடிய கல்வி ஒரு குடும்பம் சார்ந்த கல்வியாக இருக்கும்.
படிப்பது, பட்டங்கள் பெறுவது ஆகியன வாழ்வில் ஒரு வளர்ச்சி நிலை. பெண்களின் வாழ்வில் அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகள் பல உள்ளன.
அவற்றையெல்லாம் பெற்று பெண்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதுடன், கல்வியின் மூலம் பெற்ற நன்மைகளில் சிலவற்றை இந்த சமூகம் பயன்பெறும் வகையில் திருப்பி அளிக்க வேண்டும் என்றார்.
விழாவுக்கு கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ.அபுல்ஹசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் வரவேற்று, கல்வி அறிக்கை, பட்டமளிப்பு உறுதிமொழி ஆகியவற்றை வாசித்தார்.
கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.