பேராவூரணி அருகே உள்ள களத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசின் கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் சார்பில் கஜா புயல் பாதித்த நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் ஏற்கெனவே 20 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, பேராவூரணி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட களத்தூர் கிராமத்தில் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா மூத்த விஞ்ஞானி முனைவர் இரா. வெங்கடேசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது .
விஞ்ஞானிகள் மா.அருள்முத்தையா, இரா.சுந்தர், துறையூர் ரா.தென்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
500 மாணவர்கள் மற்றும் 1000 பெற்றோர்கள் என மொத்தம் 3,100 தென்னங்கன்றுகள் மற்றும் பல வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், உயிர்த்துளி நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.கே.ஆர். கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் குமார் , பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதன்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மரக்கன்றுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை துறையூர் எல்ஐசி ராமசாமி செய்திருந்தார்.