ஒரத்தநாடு வட்டம் திருவோணம் அருகே வெல்லத்தான்விடுதியைச் சேர்ந்த விவசாயி முத்துசாமி. இவர் தனது வீட்டில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வந்த மர்ம விலங்கு அங்கிருந்த 6 ஆடுகளை கடித்து குதறியதில் அவை உயிரிழந்தன.
தகவலறிந்து அங்கு வந்த திருவோணம் உதவி ஆய்வாளர் மேகநாதன், காவலர் சரவணன், வனத்துறை அதிகாரி ராமதாஸ் மற்றும் போலீஸார், உயிரிழந்த ஆடுகளை கடித்தது சிறுத்தையா அல்லது வேறு ஏதும் விலங்கா, வெறிநாய்களா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் பதிவாகியுள்ள கால் தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.முன்னதாக, திருவோணம் அருகே உள்ள பின்னையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.