பட்டுக்கோட்டை நகரில் உடனடியாக புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சீனிவாசன் நகர் குடியிருப்போர் நலச் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டம் தலைவர் சி.ரெங்கசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் எஸ்.ராசேந்திரன், சி.கோபாலகிருஷ்ணன், எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, நிகழாண்டில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனிவாசன் நகர் பகுதி மக்கள் நெடுந்தொலைவிலுள்ள அண்ணா நகர் பகுதிக்குச் சென்று ரேசன் பொருள்கள் வாங்கி வர வேண்டியுள்ளது. மேலும் சீனிவாசன் நகரை ஒட்டியுள்ள ஆர்.வி.நகரில் தற்போது நியாய விலை
அங்காடிக்கு புதிய கட்டடம் கட்டி திறக்கப்பட்டும் செயல்படாமல் உள்ளது. அதை ஆர்.வி. நகர், சீனிவாசன் நகர் குடியிருப்புவாசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நேரிலும், அஞ்சல் மூலமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பிரச்னையில் மேலும் கால தாமதம் செய்தால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது. பல கோடி ரூபாய் செலவில் அகலப் பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், காரைக்குடி-திருவாரூர் தடத்தில் விரைவு ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடக்கத்தில் செயலாளர் கே. காளிமுத்து வரவேற்றார். நிறைவாக எஸ். பாலசிங்கம் நன்றி கூறினார்.