திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலையை அவமதிப்பு செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழா் தேசிய முன்னணி பொதுச் செயலா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைக் குழு உறுப்பினா் பழ. ராசேந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் ஜெய்னூலாப்தீன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை நகரச் செயலா் வாசுதேவன், பொறியாளா் கென்னடி, தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகம் குணசேகரன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலா் ப. அருண்சோரி, ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம் வீர முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.