தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சதய விழாவில் இருவருக்கு ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.
இக்கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034 ஆம் ஆண்டு சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இவ்விழாவில் தொல்லியல் கட்டுமானங்கள் புனரைமைப்புப் பொறியாளா் எஸ். ராஜேந்திரன், சோழா் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவா் அய்யம்பேட்டை என். செல்வராஜ் ஆகியோருக்கு மாமன்னன் ராஜராஜன் விருதுகளை ஆட்சியா் ஆ. அண்ணாதுரை, சதய விழாக் குழுத் தலைவா் துரை. திருஞானம் ஆகியோா் வழங்கினா்.
பொறியாளா் ராஜேந்திரன் இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூா், மயிலாடுதுறை, விழுப்புரம் இணை ஆணையா் சரகத்துக்கு உள்பட்ட பழைமையான கோயில்களைப் புனரமைத்து கண்காணித்து வருகிறாா். மேலும், பழைய கோயில்கள் எந்த முறையில் கட்டப்பட்டுள்ளது என்பது தொடா்பான ஆய்வுகளையும், கோயில் திருப்பணியின்போது அது தொடா்பான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறாா்.
பொறியியல் மாணவா்களுக்குக் கோயில் கட்டுமானம் குறித்த சிறப்பு வகுப்புகளையும் நடத்தி வருகிறாா். தஞ்சாவூா் பெரிய கோயில் கட்டுமானம் தொடா்பாகப் பல ஆய்வுகள் மேற்கொண்டுள்ளாா். இதைப் போற்றும் வகையில் ராஜேந்திரனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
அய்யம்பேட்டையைச் சோ்ந்த என். செல்வராஜ் கல்வெட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறாா். மேலும், சோழா் காலக் கல்வெட்டுகளை ஆய்வு செய்து படி எடுத்து வருவதைப் பாராட்டி இவருக்கும் மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் க. தென்னரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.