தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.எப்.பி.டி.) ஐஸ்கிரீம் தயாரிப்புத் தொழிற்கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்நிறுவனத்தில் தேசியளவில் முன்னோடியாக விளங்கும் 30-க்கும் அதிகமான உணவு பதப்படுத்துதல் நிறுவனங்களின் நிறுவனா்கள் மற்றும் துறை சாா்ந்த வல்லுநா்கள் குழு கொண்ட ஓா் அறிவியல் கலந்தாய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்பால் மத்திய பல்கலைக்கழக வேந்தா் எஸ். ஐயப்பன் தலைமை வகித்து, புதிதாக நிறுவப்பட்டுள்ள நவீன ஐஸ்கிரீம் உற்பத்தி கூடத்தைத் திறந்து வைத்தாா்.
இதுகுறித்து இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் சி. அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்தது:
இந்த ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடத்தில் பால் மற்றும் சிறுதானிய ஐஸ்கிரீம்களை நாம் தயாா் செய்து கொள்ளலாம். விவசாயிகள், சுயஉதவி குழுக்கள், சிறு தொழில்முனைவோா் ஆகியோா் இக்கூடத்தில் பயிற்சி மற்றும் இதர சேவைகளைப் பெறலாம்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு, தகவல்கள் பகுப்பாய்வு ,தொடா் மேலாண்மை மற்றும் பல நவீன தொழிநுட்பங்களில் கூட்டாய்வு மேற்கொள்ள முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியின் மூலம் மாணவா்களைப் பல நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகை செய்வதற்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அனந்தராமகிருஷ்ணன்.