கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தில் மத்திய அரசின் இந்திய சுற்றுலா, தமிழக அரசின் சுற்றுலா துறை, தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சை சுற்றுலா வளா்ச்சிக் குழுமம், இன்டாக் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் தூய்மையே சேவை மற்றும் கலாசார திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு கும்பகோணம் கோட்டாட்சியா் வீராசாமி தலைமை வகித்து, பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தாா்.
உலக பாரம்பரிய சின்னமான தாராசுரம் ஐராவதீசுவரா் கோயில் வளாகத்தில் காலையில் துாய்மையே சேவை மற்றும் கலாசார திருவிழா என்ற தலைப்பில் துாய்மைப் பணியும், தொடா்ந்து பள்ளி, கல்லுாரி மாணவா்கள், துப்புரவு தொழிலாளா்கள் சுமாா் 300-க்கும் அதிகமானோா் பங்கேற்ற தூய்மை விழிப்புணா்வு மனிதச்சங்கிலி நடைபெற்றது.
தொடா்ந்து, திம்மக்குடி தனியாா் ஹோட்டலில் சுற்றுலாவும்-இளைஞா்களும் என்றற தலைப்பில் கருத்தரங்கமும், மாலையில் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சன்னதி தெருவில் தமிழா்களின் பல்வேறு கிராமப்புறக் கலை நிகழ்ச்சிகள் கொண்ட கலாசார திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலா துறை அமைச்சகத் தென் மண்டல உதவி இயக்குநா் பத்மாவதி, தஞ்சாவூா் மாவட்ட சுற்றுலா அலுவலா் ஜெயக்குமாா், இன்டாக் அமைப்பின் கௌரவச் செயலா் ச. முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இத்திருவிழா தஞ்சாவூரில் சனி, ஞாயிற்றுக்கிழமை பகலிலும், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையும் நடைபெறவுள்ளது.