கஜா புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை நிவாரணம் கிடைக்காமல் விடுபட்ட அனைவருக்கும் அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றிய சிறப்புப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கஜா புயலில் தென்னந்தோப்புகளை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலருக்கு இதுவரை அரசின் புயல் நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, விடுபட்ட தென்னை விவசாயிகள் அனைவருக்கும் அரசு உடனடியாக புயல் நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல, கஜா புயலில் வீடுகள் சேதமடைந்து நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு அவர்களின் ஓட்டு வீடுகளுக்கும், கூரை வீடுகளுக்கும் உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டு 25 நாள்களுக்கு மேலாகியும், அணை முழுமையாக நிரம்பிய பின்னரும் கூட கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வந்து சேரவில்லை. எனவே, உடனடியாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களிலுள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரி, தண்ணீர் நிரப்பித் தந்து நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும், அதம்பை, லெட்சத்தோப்பு, த.வடகாடு ஆகிய கிராமங்களில் உள்ள சிஎம்பி வாய்க்கால்களை சீரமைத்து தடையின்றி தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய கடன்களை உடனடியாக வழங்க வேண்டும். காரைக்குடி- பட்டுக்கோட்டை-சென்னை தடத்தில் பயணிகள் ரயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட விவசாயிகள் சங்க துணைத் தலைவர் ஏ. கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார், செயலர் என்.வி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எம். செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் எஸ். கந்தசாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில், பட்டுக்கோட்டை ஒன்றிய விவசாயிகள் சங்கத் தலைவர்-ஆர்.எஸ். வீரப்பன், செயலர்-ஆர். ஜீவானந்தம், பொருளாளர்-மாதவன் ஆகியோர் உள்பட 9 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.