பேராவூரணி வட்டாரத்தில் வேளாண்மை துறை மூலம் மண்வள அட்டை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது .
மண்வள பாதுகாப்பு இயக்கத்தின்கீழ் பேராவூரணி வட்டாரத்தில் வலப்பிரமன்காடு, சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் வாத்தலைக்காடு ஆகிய கிராமங்கள் முன்மாதிரி கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டு, இரண்டு கிராமங்களிலும் உள்ள அனைத்து விவசாயிகளின் வயல்களிலும் இருந்து மண்மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டு ஆடுதுறை மண் ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆராய்ச்சியின் முடிவில் வலப்பிரமன்காடு கிராமத்தில் 227 விவசாயிகளுக்கும், வாத்தலைக்காடு கிராமத்தில் 75 விவசாயிகளுக்கும் மண்மாதிரிகள் முடிவுகள் அடங்கிய மண்வள அட்டை வழங்கும் விழா பேராவூரணி வட்டாரம் வலப்பிரமன்காடு கிராமத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். மாலதி பேசியது:
இந்த மண்வள அட்டை ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமாகும். விவசாயிகள் மண்வள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவீடுகளை மனதில் கொண்டு அதற்கு ஏற்றார்போல் உரமிட வேண்டும். விலைப்பட்டியல் இருந்தால் மட்டுமே உரமானியத்தை விவசாயிகள் பெறமுடியும்.
மேலும், வருங்காலங்களில் மத்திய அரசு உரத்துக்கான மானியத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த இருப்பதால், மண்வள அட்டை கொண்டு உரத்துக்கான மானியம் கணக்கிடப்படும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரத்துக்கான விலைப்பட்டியலை நேரடி விற்பனை இயந்திரத்தின் மூலம் கேட்டு வாங்க வேண்டும் என்றார்.
விழாவில், ஆடுதுறை மண் ஆராய்ச்சி நிலைய வேளாண்மை அலுவலர் பிரபாவதி, சேதுபாவாசத்திர வேளாண்மை அலுவலர் சங்கவி மற்றும் வலப்பிரமன்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, உதவி வேளாண்மை அலுவலர்கள் தீபா, பாலசுந்தர் மற்றும் மண்வள அட்டைக்கான அனைத்து பயனாளிகளும் கலந்து கொண்டனர்