வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் நிலையில் காலியாக உள்ள பணியிடங்களைப் பதவி உயர்வு அளித்து, நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட வருவாய் அலகில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒருவரே இரண்டு, மூன்று இருக்கைப் பணிகளைப் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவது கால தாமதம் ஆவதுடன், பணியாளர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக இளநிலை வருவாய் ஆய்வர், முதுநிலை வருவாய் ஆய்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், அடிப்படை பணியாளர் பணியிடங்களான இரவுக் காவலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. எனவே, வருவாய்த் துறையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர். தங்க பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தரும. கருணாநிதி, பொருளாளர் எம். அய்யம்பெருமாள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.