கல்லணைக் கால்வாய் நவீனப்படுத்தப்படாததால் கடைமடைக்கு போதிய தண்ணீர் சென்றடையவில்லை என்றார் தஞ்சாவூர் எம்.பி. எஸ்.எஸ். பழனிமாணிக்கம்.
பேராவூரணி கடைமடைப் பகுதிக்கு கல்லணை கால்வாயில் முறைவைக்காமல் தண்ணீர் விட வேண்டும், ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்பித் தரவேண்டுமென விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆய்வு செய்ய பேராவூரணிக்கு திங்கள்கிழமை வந்த எம்.பி. எஸ்.எஸ். பழனிமாணிக்கம், விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் எம்.பி. கூறியது: கல்லணை கால்வாயை தமிழக அரசு நவீனப்படுத்ததால், கடைமடைக்கு காவிரி தண்ணீர் சென்று சேரவில்லை. உரிய முறையில் புனரமைப்பு செய்தால் மட்டுமே கடைமடைக்கு தேவையான தண்ணீர் சென்றடையும். இதை விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்டோபர் 15ஆம் தேதிக்குள் இருக்கின்ற நீராதாரங்களை கொண்டு, தண்ணீர் வழங்கி நீர் குறையில்லாத வட்டாரமாக ஆக்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதை விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.திமுக மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேரன் எம்எல்ஏ, பேராவூரணி ஒன்றிய செயலாளர் க.அன்பழகன், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.கி. முத்துமாணிக்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.