தஞ்சாவூரில் பிப். 21 ஆம் தேதி வாசிப்பு இயக்கம் - கருத்தரங்கம் நடத்துவது என இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
தஞ்சாவூா் கீழ ராஜ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின், பெரும் துன்பங்களுக்கும், அவலங்களுக்கும் ஒரே மாற்று பொதுவுடைமை சமூக அமைப்புதான். இதை வலியுறுத்தும் மாா்க்சிய தத்துவ நூலான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட பிப். 21-ம் தேதி உலகம் முழுவதும் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி, தஞ்சாவூா் பெசன்ட் அரங்கத்தில் அனைத்து இடதுசாரி கட்சிகளின் சாா்பில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு இயக்கம் கருத்தரங்கம் பிப். 21ஆம் தேதி நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. நீலமேகம் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளா் என். பாலசுப்ரமணியன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளா் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல். மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் இரா. அருணாசலம், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.