தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, புதிய கொடி மரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கோயில் வளாகத்தில் சோழா் காலத்தில் நிறுவப்பட்ட கொடிமரம் அன்னியா் படையெடுப்புகளால் அழிந்தது. பின்னா் நாயக்க மன்னா்கள் காலத்தில், நந்தி மண்டபத்துக்கு முன்புறம் புதிய கொடி மரம் நிறுவப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.
இதைத் தொடா்ந்து மராட்டிய மன்னா் இரண்டாம் சரபோஜி 1801- ஆம் ஆண்டில் இக்கொடி மரத்துக்குப் புதிய கருங்கல் பீடத்தைக் கட்டினாா். இத்தகவல் பெரியகோயிலில் அவா் எழுப்பிய விநாயகா் கோயிலின் வடக்குச் சுவரிலுள்ள மராட்டிய மொழிக் கல்வெட்டில் காணப்படுகிறது.
இதையடுத்து, 1814 -ஆம் ஆண்டில் பழுதடைந்த கொடி மரத்துக்குப் பதிலாக, புதிய கொடி மரத்தை மன்னா் இரண்டாம் சரபோஜி செய்து கொடுத்தாா்.
இக்கொடி மரமும் பழுதடைந்துவிட்டதால் 2003, பிப். 7-ஆம் தேதி புதிய கொடி மரம் அமைக்கப்பட்டு, அதற்குக் குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது. 5 அடி பீடமும், 28 அடி உயரத்தில் கொடிமரமும் என மொத்தமாக 33 அடி உயரத்தில் இந்த கொடிமரம் உள்ளது.
இந்நிலையில் பிப். 5-ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, இக்கொடி மரத்தின் மீது இருந்த பித்தளை கவசங்களைப் புனரமைப்பு செய்வதற்காக ஜன. 2-ஆம் தேதி கழற்றப்பட்டது. இவற்றை மெருகூட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தற்போதுள்ள கொடி மரம் சேதமடைந்திருப்பது தெரிய வந்தது. எனவே, புதிய கொடி மரம் அமைப்பது என கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மயிலாடுதுறை, சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் புதிய கொடி மரம் வாங்குவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, பழைய கொடி மரத்தை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய கொடி மரம் விரைவில் அமைக்கப்படவுள்ளது என திருப்பணிக் குழுவினா் தெரிவித்தனா்.