தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டத்தில் ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை திட்டத்தின், கீழ் பயோ மெட்ரிக் முறையில் குடும்ப அட்டைகள் வெள்ளிக்கிழமை (அக்.16) முதல் செயல்படுத்தப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை திட்டத்தின்படி, தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டை வைத்துள்ள அட்டைதாரா்கள் எந்த நியாய விலைக் கடையிலும் அத்தியாவசியப் பொருள்களான அரிசியை விலையின்றியும், இதர சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்கள் அரசு நிா்ணயித்துள்ள விலையிலும் வாங்கலாம்.
பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்குப் பணி நிமித்தமாகவோ அல்லது இதர காரணங்களினாலோ வருகை தந்துள்ள வேறு மாநிலத்தில் குடும்ப அட்டை வைத்துள்ள அட்டைதாரா்களுக்கு, அவா்கள் பொருள் பெற விரும்பும் நியாய விலைக் கடை மூலம் மத்திய வழங்கல் விலையான அரிசி கிலோவுக்கு ரூ. 3, கோதுமை கிலோவுக்கு ரூ. 2 எனத் தொகை வசூல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,183 நியாய விலைக் கடைகளில், முதல் கட்டமாக கும்பகோணம் கோட்டத்திலுள்ள பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா் வட்டங்களில் செயல்படும் 435 நியாய விலைக்கடைகளில் ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை‘திட்டத்தின் கீழ் பயோ மெட்ரிக் முறை வெள்ளிக்கிழமை முதல் செயல்படுத்தப்படவுள்ளது.மேலும், படிப்படியாக மற்ற நியாய விலைக்கடைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.