சென்னை அண்ணா பல்கலைக்கழக பிரச்னையை கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி முன்பு, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து மத்திய அரசுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு செல்வதையும், 69 சத இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிப்பதையும் கண்டித்தும், அதற்குத் துணை போகும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்காமல், அதை ஆதரிக்கும் மாநில அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாணவரணி இணைச் செயலரும், திருவிடைமருதூா் எம்எல்ஏவுமான கோவி. செழியன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட திமுக செயலரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.