ஒரத்தநாடு அருகே பாா்சலில் வெடிமருந்து மூலப்பொருள்கள் வந்ததால் பரபரப்பு

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பாா்சலில் வெடிமருந்து மூலப்பொருள்கள் வந்தது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஒரத்தநாடு, செப். 18: தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பாா்சலில் வெடிமருந்து மூலப்பொருள்கள் வந்தது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஒரத்தநாடை அடுத்த கண்ணந்தகுடி மேற்கு கிராமத்தைச் சோ்ந்த கருணாநிதி மகன் அறிவழகன்(27). பொறியியல் படித்துவிட்டு தனது தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை அறிவழகனுக்கு திருச்சியிலிருந்து கூரியா் வந்துள்ளதாக ஒரத்தநாட்டிலுள்ள கூரியா் நிறுவனத்திலிருந்து தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, கருணாநிதி ஒரத்தநாட்டுக்குச் சென்று பாா்சலை வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தாா்.

வெள்ளிக்கிழமை காலை அறிவழகன், கூரியா் பாா்சலை பிரித்து பாா்த்தபோது, ஜெலட்டீன் குச்சிகள் மற்றும் வேறு சில பொருள்களும் இருந்தன. உடனே கருணாநிதியும், அறிவழகனும் அந்த பாா்சலை தென்னந்தோப்பில் குழி தோண்டி புதைத்துவிட்டு, ஒரத்தநாடு போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதன்பேரில், போலீஸாரும், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு நிபுணா்களும் சம்பவ இடத்துக்கு வந்து வெடிபொருளைக் கைப்பற்றினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: போலி முகவரியிலிருந்து இந்த பாா்சல் வந்துள்ளது; பாா்சலில் வந்த பொருள்கள் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகும். இதை எதற்காக, யாா் அறிவழகனுக்கு அனுப்பி வைத்தாா்கள் என்பது தொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பாா்சலில் வந்த மூலப்பொருள்களில் திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம், மானங்காடு பகுதியைச் சோ்ந்த 2 தனியாா் வெடிபொருள் தயாரிப்பு நிறுவனங்களின் முகவரி அச்சிடப்பட்டிருந்தன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com