மத்திய, மாநில அரசுகளின் மக்கள், தொழிலாளா் விரோத போக்குகளைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்தி, பொதுத் துறை, இயற்கை வளங்களைச் சூறையாடும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், ஊதியக் குறைப்பு, வேலை மறுப்பு, நல வாரிய பதிவுகளில் குளறுபடிகளைக் கண்டித்தும் நாடு முழுவதும் அனைத்து தொழிற் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இதன்படி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்கள் சி. ஜெயபால் (சிஐடியு), ஆா். தில்லைவனம் (ஏஐடியுசி), கு. சேவியா் (தொமுச), மோகன்ராஜ் (ஐஎன்டியூசி), ராஜன் (ஏஐசிசிடியூ) ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், ஜி. கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் இ.டி.எஸ். மூா்த்தி, பி.என். போ் நீதி ஆழ்வாா், த. முருகேசன், எஸ். மில்லா் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.