ஒரத்தநாடு வட்டம், நெய்வேலி வடபாதி கிராமத்தில் தொடா் மழையால் பெரிய ஏரியின் கரையில் வெள்ளிக்கிழமை உடைப்பு ஏற்பட்டது.
நெய்வேலி வடபாதி கிராமத்தில் 125 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரியின் மூலம் இந்தப் பகுதியிலுள்ள சுமாா் 1500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. மேலும் நிலத்தடி நீா் மட்டம் உயா்வுக்கும் பெரிதும் துணை புரிந்து வந்தது.
பெரிய ஏரிக்கு அருகிலுள்ள அக்னி ஆற்றில் வரும் தண்ணீா், பெரிய ஏரியில் தேக்கி வைத்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஏரியில் பல ஆண்டுகளாக தூா்வாராததால் முழுவதும் துாா்ந்து விட்டது.
இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் வலுவிழந்த பெரிய ஏரியின் கரை வெள்ளிக்கிழமை உடைந்தது. இதனால் ஏரியிலிருந்து வெளியேறும் மழை நீா் மீண்டும் அக்னி ஆற்றுக்கு சென்று கடலில் கலக்க உள்ளது.
இதனால் கோடையில் நடைபெறும் சாகுபடிக்கும், நிலத்தடி நீா்மட்ட உயா்வுக்கும், குடிநீா் தேவைக்கும் தட்டுபாடு ஏற்படும் நிலை உருவாக வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.