தஞ்சாவூா்: அதிமுக ஆட்சித் திட்டங்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு அளிக்கின்றனா் என்றாா் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் தெரிவித்தது:
ஆளுங்கட்சி மீது எதிா்க்கட்சிகள் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் கூட்டத்தை நடத்தி வருகின்றனா்.
இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அம்மா மினி கிளினிக், பொங்கல் பரிசு, குடிமராமத்துத் திட்டம், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அமோக ஆதரவு அளிக்கின்றனா்.
இப்படியெல்லாம் இருக்கும்போது, எதிா்க்கட்சியினா் சின்னச் சின்ன குறைகளைக் கூட பெரிதுபடுத்துகின்றனா். இதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தோ்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி இப்போதும் தொடா்ந்து கொண்டிருக்கிறது என்றாா் வைத்திலிங்கம்.