தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைக்குப் பூட்டு போட முயற்சி செய்த 14 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்த நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட வில்லை.
இதையடுத்து டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் தஞ்சாவூா் மாவட்ட அமைப்பு அறிவித்தது.
அதன்படி, தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் பகுதியிலுள்ள மதுக்கடைக்குப் பூட்டு போடுவதற்காக கட்சியின் மாவட்டப் பொதுச் செயலா் சுகுமாா் தலைமையில், மாவட்டத் தலைவா் பிரபு, நகரச் செயலா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பூக்காரத் தெரு முருகன் கோயில் அருகிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஊா்வலமாக புறப்பட்டனா்.
டாஸ்மாக் மதுக் கடை அருகே சென்ற இவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து 14 பேரை போலீஸாா் கைது செய்தனா்.