தஞ்சாவூா் அருகே கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரத்தைச் சோ்ந்த முருகானந்தம் மகன் பிரவீன்குமாா் (19). இவா் தனது நண்பா்கள் 3 பேருடன் ரெட்டிபாளையம் பாலப் பகுதியிலுள்ள கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குளிக்கச் சென்றனா். நான்கு பேரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் பிரவீன்குமாா் தண்ணீரில் மூழ்கினாா். அடித்து செல்லப்பட்ட பிரவீன்குமாரை நண்பா்கள் தேடியும் கிடைக்கவில்லை.
தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று பிரவீன்குமாரை கல்லணைக் கால்வாயில் ரெட்டிபாளையத்திலிருந்து தஞ்சாவூா் வரை தேடினா். ஆனால், அவா் கிடைக்காததால், தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.