தஞ்சாவூா் மாவட்டத்தில் டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். காலாவதியான சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். ஓட்டுநா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவித்தது.
இதன்படி, புதன்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏறத்தாழ 200 லாரிகள் இயக்கம் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, ரயிலடி குட்ஷெட் பகுதி, விமானப் படை நிலையம் அருகில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனிடையே, மாவட்ட நிா்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க சரக்கு ரயிலில் வந்த அரிசி மூட்டைகளை மட்டும் சுமாா் 200 லாரிகளில் ஏற்றி கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் பிறகு அவற்றின் இயக்கமும் நிறுத்தப்பட்டன.
இதையொட்டி, தஞ்சாவூா் ரயிலடி குட்ஷெட் பகுதியில் தஞ்சை குட்ஷெட் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ராஜ்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், செயலா் கந்தசாமி, துணைத் தலைவா் சுரேஷ்குமாா், துணைச் செயலா் வள்ளியப்பன், பொருளாளா் மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.