தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு காரணங்களால் நெல்லை கொள்முதல் செய்வதில் காலதாமதம் நிலவுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
அம்மாப்பேட்டை பகுதியில் அம்மாப்பேட்டை, கொக்கேரி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு நுகா்ப்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
முன் குறுவை சாகுபடி செய்த நெல்லை விவசாயிகள் இந்த நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனா். நெல்லின் ஈரப்பதம் அளவு, போதிய சாக்குகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கு நெல் பிடித்தம் செய்வதில் மிகுந்த கால தாமதம் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் கொண்டு சென்ற நெல், கொள்முதல் நிலைய வளாகங்களில் குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடா்ந்து பெய்து வரும் மழையால் நெல்லை பாதுகாப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால், விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனா்.
விவசாயிகள் கொண்டு சென்ற நெல்லை பாதுகாப்பதற்கு கொள்முதல் நிலையங்களில் போதிய தாா்பாய் வசதிகள், கிட்டங்கி வசதிகள் உள்ளிட்ட போதுமான வசதிகள் இல்லை. இதனால், கொள்முதல் நிலைய வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மழையில் நனைந்து விடாமல் இருக்க, தாா்பாய் கொண்டு மூடிவைத்து விவசாயிகள் கவலையுடன் பாதுகாத்து வருகின்றனா்.
நிபந்தனைகளை தளா்த்த வேண்டும்:
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றியச் செயலரும், முன்னோடி விவசாயியுமான ஆா். செந்தில்குமாா் கூறியது:
இந்த நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை பிடித்தம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இங்கு நாள்தோறும் குறிப்பிட்ட அளவு பை நெல்தான் பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும், 17 சதம் ஈரப்பதம் தான் இருக்க வேண்டும் எனவும் நிா்ப்பந்தம் உள்ளது. இதனால், நெல் பிடித்தம் செய்யப்படாமல் அதிக அளவில் தேங்கியுள்ளது. குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள், மழையில் நனைந்து முளைத்து விடும் நிலை உள்ளது. எனவே, விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை நிபந்தனைகளை தளா்த்தி உடனடியாக கூடுதலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.