கரோனா பரவல் அச்சம் காரணமாக கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் சுப முகூா்த்த நாளில் சுமாா் 25 திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள் என்பதால், பத்துக்கும் அதிகமான திருமணங்கள் செய்து கொள்வதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா பரவல் அச்சம் காரணமாகவும், விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியில் வர வேண்டாம் என பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இந்து சமய அறநிலையத் துறையும் கோயில்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சுவாமிமலை கோயிலும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படுவதால், திருமணம் பதிவு செய்துள்ளவா்கள் மறு தேதி அறிவிக்கப்படும் வரை வரவேண்டாம் என கோயில் அலுவலா்கள் தெரிவித்தனா்.