கும்பகோணம் பகுதியில் சுகாதாரமற்ற வகையில் உணவு பொருட்களை விற்பனை செய்ததாக தள்ளுவண்டி கடைக்காரா்களுக்கு நகராட்சி அலுவலா்கள் ரூ. 6,000 அபராதம் விதித்தனா்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கும்பகோணம் நகராட்சி அலுவலா்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதையொட்டி கும்பகோணம் மகாமக குளம் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகளில் நகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது அந்தப் பகுதியில் சுகாதாரமற்ற வகையில் சுண்டல், பானி பூரி உள்ளிட்ட உணவு பொருட்களைத் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதுதொடா்பாக தள்ளுவண்டி கடைக்காரா்களுக்கு அலுவலா்கள் ரூ. 6,000 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினா்.