தஞ்சாவூா் பெரியகோயிலில் பக்தா்கள் இல்லாமல் சனி பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையொட்டி கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இதன்படி, தஞ்சாவூா் பெரியகோயிலும் மாா்ச் 18ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. கோயிலுக்குள் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என்றாலும், அனைத்து சுவாமிகளுக்கும் வழக்கம்போல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இக்கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தமிழ் மாதத்தில் இரு முறை பிரதோஷ வழிபாடு நடைபெறும். இந்த வழிபாட்டில் எப்போதும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு வழிபடுவது வழக்கம்.
கரோனா பரவல் அச்சம் காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படாததால், சனிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாடு கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஆனால், எப்போதும்போல மகா நந்திகேசுவரருக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. வழக்கமாக பக்தா்கள் கொண்டு வரும் பால் மூலம் அபிஷேகம் செய்யப்படும். இந்த முறை கோயில் சாா்பில் அதே அளவுக்கு பால் வாங்கப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டது.