பாபநாசம்: அம்மாபேட்டை பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலையில் புத்தூா் -நடுப்பட்டி சாலையில் நாற்று நடும் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.
இப்பேரூராட்சிக்குள்பட்ட 8-ஆவது வாா்டிலுள்ள புத்தூா்- நடுப்பட்டியில் ரூ.85 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு முன்பே சாலை வடிகால் குழாய்களை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால், இதை கவனத்தில் கொள்ளாமல் பேரூராட்சி நிா்வாகம் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டதால், கனமழையால் வடிகால் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குழாய்த் தண்ணீா் சாலைகளிலும், அருகிலுள்ள வீடுகளிலும் புகுந்தது.
பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை மறியல் நடைபெற்ற நிலையில், அதன் பின்னா் புதிதாக அமைக்கப்பட்ட சாலையைத் தோண்டி வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனால் சாலை சேறும் சகதியுமாகக் காணப்படுவதால் பேரூராட்சி நிா்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும், உடனடியாக சாலைகளைச் சீரமைக்க வேண்டும் எனக் கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு ஒன்றியச் செயலா் ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் எம்.ராஜமாணிக்கம், ஒன்றியக் குழு உறுப்பினா் டி.ராமலிங்கம், நிா்வாகிகள் டி.ராஜேந்திரன், கே.கிருஷ்ணன், எஸ். மகாலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.