பட்டுக்கோட்டை: காரைக்குடி-திருவாரூா் வழித்தடத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டுமென பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளா், திருச்சி கோட்ட மேலாளருக்கு சங்கத்தின் தலைவா் என்.ஜெயராமன், செயலா் வ.விவேகானந்தம் ஆகியோா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:
பட்டுக்கோட்டை ரயில் நிலைய சரக்கு முனையக் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கி, விரைந்து முடிக்க வேண்டும். பட்டுக்கோட்டை பகுதியில் உற்பத்தியாகும் நெல், தேங்காய், மாங்காய், அரிசி, உப்பு, கருவாடு போன்ற பொருள்களை ஏற்றுமதி செய்யவும், இப்பகுதிக்குத் தேவையான உரம், பூச்சிமருந்து, ஜவுளி, கட்டுமானப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவும் பட்டுக்கோட்டையில் சரக்கு ரயில் போக்குவரத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
காரைக்குடி- திருவாரூா் வழித்தடத்தில் முக்கிய நகரங்களுக்கு விரைவு ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே துறை சாா்பில், பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் சாலையிலிருந்து நகராட்சி எரிவாயு தகன மேடை வரை புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.